தமிழகத்தில் கோடை வெப்பம் தொடங்கி விட்டது! இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களிலேயே வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அந்த எச்சரிக்கை உண்மையாய், தற்போது சில நாட்களில் வெப்பம் மிக அதிகமாகவே பதிவாகி வருகிறது. இது இன்னும் சில வாரங்களில் “அக்னி நக்ஷத்திரம்” எனப்படும் கத்திரி வெயில் பருவத்தில் கூடிய தீவிரத்துடன் நம்மை தாக்கும். கோடை வெப்பத்திலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொளவ்து குறித்து இங்கு பார்க்கலாம்.
கோடை வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்:
பொதுவாக கோடை பருவத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு, தோல் வியாதிகள், ஹீட் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படக்கூடும். இது குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களை அதிகம் பாதிக்கக்கூடும்.
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?
ஹீட் ஸ்ட்ரோக் என்பது உடலில் வெப்பம் அதிகமாகக் கூடி, தண்ணீரின் குறைபாடு காரணமாக ஏற்படும் ஒரு அவசர நிலை. இதில் தோல் வறண்டுபோவது, தாகம், தலைவலி, மூச்சு திணறல், மயக்கம் போன்றவை ஏற்படும். சரியான கவனிப்பு இல்லையென்றால் இது உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம்.
யார் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
- கட்டிட தொழிலாளர்கள்
- டெலிவரி செய்யும் ஊழியர்கள்
- தொழிற்சாலை பணியாளர்கள்
- வாகன ஓட்டிகள்
- வயதானவர்கள் மற்றும் குழந்தைகள்
வெயிலில் பாதுகாப்பதற்கான மருத்துவ ஆலோசனைகள்:
- உச்ச வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வீட்டில் தங்குவது நல்லது.
- பருத்தி துணி ஆடைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.
- மிகுந்த நீர்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் பழங்கள் சாப்பிடுங்கள்:
- தர்பூசணி, இளநீர், நுங்கு, வெள்ளரிக்காய், எலுமிச்சை, மாதுளை, ஆரஞ்சு பழச்சாறுகள், கம்மங்கூழ், மோர், தயிர், பச்சை காய்கறிகள் போன்றவைகளை எடுத்து கொள்ளுங்கள்
- வெங்காயம் மற்றும் கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். இவை உடலுக்கு குளிர்ச்சி தரும்.
- அசைவ உணவுகளில் மீன் வகையை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். மிகுந்த கார உணவுகள், பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்புகள் தவிர்க்க வேண்டும்.
- நாள்தோறும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியே செல்லும் பொழுது ஒரு தண்ணீர் பாட்டில் எப்போதும் கொண்டு செல்ல வேண்டும்.
- ஒரு நாளில் இருமுறை குளிக்கவும். காலை மற்றும் மாலை அல்லது இரவு குளிப்பதன் மூலம் உடல் வெப்பம் குறைக்க முடியும்.
இன்று நாம் சந்திக்கின்ற வெப்பநிலை மாற்றங்களை எளிதாகக் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நாம் எடுக்கக்கூடிய சிறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் மற்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, மேலே கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம்.