காடன் திரை விமர்சனம்
ராணா டகுபதி, விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், ஸ்ரியா பில்கோங்கர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரபு சாலமன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
2020ம் ஆண்டு வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக தற்போது 2021ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தை முழுக்க முழுக்க மலைப்பகுதியில் எடுத்துள்ளனர். வனப்பகுதியை அழித்து பெறக்கூடிய வளர்ச்சி அவசியமற்றது’ என்ற கருத்தை முன்வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.
மனித வேட்டையிலிருந்து யானைகளை பாதுகாக்கவும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை பாதுகாக்கவும் ராணா டகுபதி காட்டுவாசியாகவே வாழ்ந்து வருகிறார். கார்ப்பரேட்காரர்கள் அந்த காட்டின் ஒரு பகுதியை அழித்து அதில் ரிசார்ட் ஒன்றை கட்ட முயற்சி செய்கிறார்கள். இதனால் யானைகளின் வழித்தடம் அழிக்கப்பட்டு அவை குடிக்க தண்ணீர்கூட இல்லாமல் தவிக்கின்றன.
இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர ஆதிவாசிகளுடன் இணைந்து போராடுகிறார் ஹீரோ. அவருடைய போராட்டம் ஜெயித்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ஒரு பிரம்மாண்டமான காட்டில் யானை பறவைகளுடன் தத்ரூபமாக எடுத்துள்ளனர். நம்மை ஒரு அடர்ந்த காட்டுக்குள் கொண்டுபோய் அமரவைத்த உணர்வை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்.
ராணா டகுபதி படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். இன்னொரு ஹீரோவாக வரும் விஷ்ணு விஷால் சிறிது நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தில் இரண்டு நாயகிகள் படத்தில் இருந்தாலும் அவர்களுக்கான காட்சிகள் குறைவுதான். ஏ.ஆர்.அசோக்குமார் காடுகளின் அழகுகளை மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காடுகள் அழிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நேர்மையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் பிரபு சாலமன்.
