அப்பா கார்த்திக்கும், மகன் கவுதம் கார்த்திக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இதில் கவுதம் கார்த்திக் ஒரு பாக்ஸராக வலம் வருகிறார்.
சந்திரமௌலியாக வரும் கார்த்திக், தன் பழைய காரை வைத்துக்கொண்டு செய்யும் அலப்பரைகளைவிட, ஃப்ளாஷ் பேக்கில் பைரவியாக வரும் வரலட்சுமியுடன் பழகும் காட்சிகளில் மிகவும் கவர்கிறார்.
பிறகு வழக்கம்போல் கதாநாயகி ரெஜினாவை பார்த்தவுடன் காதல் வலையில் சிக்குகிறார் கவுதம். தனது காதலை உடனே ரெஜினாவிடம் வெளிப்படுத்துகிறார். சண்டையில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு, பின்னர் காதலாக மாறுகிறது.
இதனிடையே கால்டாக்சி நிறுவனம் நடத்தி வரும் மகேந்திரனுக்கு சிறந்த சேவை விருது வழங்கப்படுகிறது.
அடுத்த வருடம் இதே போல் அந்த விருதை வாங்க வேண்டும் என்று சந்தோஷ் பிரதாப் ஆசைப்படுகிறார். ஆனால் அவர் நடத்தும் கால்டாக்சி நிறுவனத்தில் சில குற்றங்கள் நடக்கிறது. அதற்கு மகேந்திரன் அச்சாணி போடுகிறார்.
இந்த நிலையில், கவுதம் கார்த்திக் பெங்களூரில் நடந்த பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று திரும்புகிறார்.
மகன் கவுதம் கார்த்திக்கிடம், எதையோ சொல்ல முயற்சி செய்கிறார் கார்த்திக். அதற்காக இருவரும் காரில் வெளியே செல்லும்போது கார் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த விபத்தில் கார்த்திக் இறந்துவிடுகிறார். இதனால் கவுதம் கார்த்திக்குக்கு பார்வையில் கோளாறு ஏற்படுகிறது.
இந்த நிலையில், வரலட்சுமி பற்றிய அதிரவைக்கும் கடிதம் ஒன்று கவுதம் கார்த்திக் வீட்டிற்கு வருகிறது.
அந்த வரலட்சுமி யார்? அவளுக்கு என்ன ஆனது? கார்த்திக் மரணத்திற்கு யார் காரணம்? வரட்சுமிக்கும், கார்த்திக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கவுதம் கார்த்திக் காதல் காட்சிகளிலும் சரி, அப்பாவை இழந்து தவிக்கும் காட்சிகளிலும் சரி ரசிகர்களை கவர்கிறார். ரெஜினா ஓரளவுக்கு கவர்ச்சியுடன் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டியிருக்கிறார்.
கார்த்திக் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தை பொறுத்தவரை சதீஷ் காமெடி கதாபாத்திரத்தில் காமெடி இருக்கும் என நினைத்து போனால் ஏமாற்றம் தான்.
இயக்குநர் திரு மாறுபட்ட கதையின் மூலம் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார்.ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாக வந்திருக்கிறது.
சாம்.சி.எஸ் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.