மும்பை : உலகின் 10 மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார். அதிலும், ஆசியாவிலிருந்து இடம்பெற்ற முதல் நபரும் முகேஷ் அம்பானிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 42% பங்குகள் முகேஷ் அம்பானியின் வசம் உள்ளது. இதன் மொத்த மதிப்பு 64.5 பில்லியன் டாலர் ஆகும். இதனால், அவர் உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக 9ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

கடந்த நாள்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ஃபேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், அபுதாபி முதலீட்டு ஆணையம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து முதலீடுகள் கிடைத்துள்ளன. இதன் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் ரூ.11 லட்சம் கோடியை தொட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை நேற்று 6% உயர்ந்தது. கொரோனா ஊரடங்கால் பலர் வேலைவாய்ப்பு, தொழில்களில் இழப்பை சந்தித்து வருகிறன்றனர். ஆனால் முகேஷ் அம்பானியின் நிறுவனமும், அவரது சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.
இதனால் அவரை முதலீட்டாளர்களும், பங்குதாரர்களும் பாராட்டி வருகின்றனர். இதுவரை, முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்து வந்த நிலையில், தற்போது உலகின் முதல் 10 மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.