ஆன்மிகம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வரலாறு
ஊர் -திருவல்லிக்கேணி
மாவட்டம்– சென்னை
மாநிலம் -தமிழ்நாடு
மூலவர் -(வேங்கட கிருஷ்ணர்) பார்த்தசாரதி.
தாயார்– ருக்மணி
தல விருட்சம்– மகிழம்
தீர்த்தம் – கைரவிணி புஷ்கரணி
திருவிழா – ஸ்ரீ பார்த்தசாரதி லட்சார்ச்சனை – பிப்ரவரி 10 நாள் திருவிழா. பிரம்மோற்சவம்- ஏப்ரல் 10 நாள் திருவிழா, வைகுண்ட ஏகாதேசி மற்றும் புதுவருடப்பிறப்பு தவிர மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.
திறக்கும் நேரம் – காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை
![](https://www.tamilxp.com/wp-content/uploads/2021/05/Parthasarathy-Swamy-Temple-Triplicane-1.jpg)
தல வரலாறு ;
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசமாகும். சுமதி ராஜன் என்னும் மன்னன் பெருமாளை குருக்ஷேத்ரப் போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக தரிசிக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது. எனவே பெருமாளிடம் வேண்டிக் கொண்டார்.
தன் தீவிர பக்தனுக்காக பாரதப்போரில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் இரண்டு கரங்களுடன் எந்த ஆயுதமும் இன்றி சங்கு மட்டும் ஏந்தி காட்சித் தந்தார். பாரதப் போரில் தானே பார்த்தனுக்கு தேரோட்டியாக நின்று பீஷ்மர் எய்த அம்புகளை தானே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் பார்க்கலாம்.
![](https://www.tamilxp.com/wp-content/uploads/2021/05/Parthasarathy-Swamy-Temple-Triplicane.jpg)
இதன் அடிப்படையில் பெருமாள், “ஸ்ரீ பார்த்தசாரதி” என்றும், ஆலயமும் அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது. வியாசர் முனிவரால் இங்கே இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். நின்றான் திருத்தலத்தில் வேங்கடகிருஷ்ணன் இவரே மூலவர். அமர்ந்த திருக்கோலத்தில் தெள்ளியசிங்கர் என்ற ஸ்ரீநரசிம்மர், கிடந்தான் திருக்கோலத்தில் மன்னாதர் எனப்படும் ஸ்ரீரங்கநாதர். இந்த மூன்று நிலைகளுமே வீரம் ,யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அளிக்கின்றன.
ஒன்பது அடி உயரம் மூலவர் சாரதிக்குரிய மீசையோடு இருப்பது இத்தலத்தின் சிறப்பாக கருதப்படுகிறது. ஒரு சமயம் பிருகு மகரிஷி திருமாளை தனது மருமகனாக அடைய இத்தலத்தில் தவமிருந்தார். இங்குள்ள புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில் தாயார் தோன்றினார். அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்து, திருமணப் பருவம் வந்த போது திருமால் ரங்கநாதர் ஆக இத்தலம் வந்து அவரை திருமணம் செய்து கொண்டு, மகரிஷியின் வேண்டுதலை நிறைவேற்றினார் பெருமாள்.
அனைத்து கோயில்களிலும் ஒரு மூர்த்தி மட்டுமே பிரதான மூலவராக இருப்பார். ஆனால் இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவராக உள்ளனர். வேங்கட கிருஷ்ணர், ரங்கநாதர், ராமபிரான், கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர், ஆகியோர் தனித்தனி சன்னதியில் உள்ளனர்.
மக்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என உணர்த்தும் விதமாக, மூலஸ்தானத்தில் வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி, வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோருடன் காட்சி தருகிறார்.
தனி சன்னதியில் இருக்கும் ராமபிரான் சீதை, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர். இங்குள்ள நரசிம்மர் யோக நிலையில் உள்ளதால் இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. பிரகாரத்தில் கஜேந்திரவரதர் கருடர் மீது காட்சி தருகிறார். இவரை நித்ய கருட சேவை சாதிக்கும் பெருமாள் என்று அழைக்கின்றனர்.
மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.
![](https://www.tamilxp.com/wp-content/uploads/2024/05/tamilxp-logo-prime.png)