தந்தையின் இறப்பு – மிகுந்த மனவேதனையோடு அறிக்கை வெளியிட்ட அஜித் குமார்

அஜித் குமாரின் தந்தை இறந்த நிலையில், அவருடைய இறுதிச்சடங்குகளை குடும்ப நிகழ்வாக கருதுவதாக ஒரு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது பின்வருமாறு..
“எங்களது தந்தையார் திரு. பி.எஸ். மணி அவர்கள் பல நாட்களாக உடல் நலம் இன்றி படுக்கையிலிருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார், கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்து எங்கள் குடும்பத்திற்கு உறுதியாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் தந்தையார் சுமார் 60 ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடு, அர்ப்பணிப்போடு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும் எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலேயோ கைபேசியிலேயே அழைப்பு விடுத்து, அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.
தற்போது உள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை ஏற்கவோ அல்லது பதில் தகவல் அனுப்பவோ இயலாததை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.
எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும் இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும் படி வேண்டிக்கொள்கிறோம்”.
இப்படி அனுப் குமார், அஜித் குமார், அணில் குமார்