ஆன்மிகம்
திருப்பதியில் உள்ள ஏழு மலைகளின் சிறப்புகள் என்ன தெரியுமா?
திருப்பதி என்றாலே வெங்கடாஜலபதியும் லட்டும் நினைவுக்கு வரும். திருப்பதியில் வேங்கட மலை, சேஷ மலை, வேத மலை, கருட மலை, விருஷப மலை, அஞ்சன மலை, ஆனந்த மலை என 7 மலைகள் உள்ளன. அவற்றில் உள்ள சிறப்பம்சம் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வேங்கட மலை
வேம் என்றால் பாவம். கட என்றால் நாசமாக்குதல் என்று அர்த்தம். பாவங்களை நீக்கக்கூடிய இந்த மலையில் மகாவிஷ்ணு வெங்கடாஜலபதியாக காட்சி தருகிறார்.
சேஷ மலை
ஆதிசேஷன் என்பது பெருமாளின் அவதாரம். இவர் மலையாக அமைந்ததால் அந்த மலைக்கு பெயர் ‘சேஷ மலை’ என்று அழைக்கப்படுகிறது.
வேத மலை
இந்த மலையில் வேதங்கள் தங்கி வெங்கடாசலபதியை பூஜித்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த மலைக்கு வேதமலை என்ற பெயர் உருவானது.
கருட மலை
ஏழுமலையானை வணங்க கருட பகவான் இங்கு வந்த போது வைகுண்டத்திலிருந்து ஏழுமலையானை எடுத்து வந்தார். இதனால் இந்த மலையை ‘கருட மலை’ என்று அழைக்கப்படுகிறது.
விருஷப மலை
விருஷபன் (ரிஷபாசுரன்) என்கிற ஒரு அரக்கன் நரசிம்மரை நினைத்து கடும் தவமிருந்தார். அரக்கனுக்கு காட்சியளித்த நரசிம்மரிடம் ‘நான் உங்களுடன் சண்டையிட வேண்டும்’ என ரிஷபாசுரன் வரம் கேட்டார். ரிஷபாசுரன் நரசிம்மருடன் சண்டையிட்டு மோட்சம் பெற்றார் என்பதால் இந்த மலைக்கு ‘விருஷப மலை’ என்று அழைக்கப்படுகிறது.
அஞ்சன மலை
அஞ்சனை என்பது அனுமனின் தாயின் பெயர். இவர் தனக்கு குழந்தை வரம் வேண்டும் என தவமிருந்தார். பிறகு ஆஞ்சநேயரைப் பெற்றெடுத்தாள். இதனால் இந்த மலையை ‘அஞ்சன மலை’ என்று அழைக்கப்படுகிறது.
ஆனந்த மலை
மகாவிஷ்ணு தலைமையில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. போட்டியின் முடிவில் இருவரின் பலமும் சமமானது என தீர்ப்பு வந்தது. பிறகு இருவரும் மகிழ்ச்சியால் மிகவும் ஆனந்தமடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு ‘ஆனந்த மலை’ என்ற பெயர் உருவானது.
You must be logged in to post a comment Login