முடி வெட்ட ஆதார் கார்டு முக்கியம்… இந்த உத்தரவுகளை கட்டாயம் தெரிஞ்சுக்குங்க…!
தமிழகம் முழுவதும் சலூன் கடைகளுக்கு செல்பவர்கள் முடி வெட்ட, தாடி ஷேவ் செய்ய வருபவர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிட்டத்தட்ட 60 நாட்கள் சலூன் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் 5ம் கட்ட ஊரடங்கில் விடுத்த சில சலுகைகளில் சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிர்வாக ஆணையரும், சிறப்பு அதிகாரியுமான ராதாகிருஷ்ணன், சலூன்கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், முடிவெட்ட, ஷேவ் செய்ய வருபவர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலங்கி, துண்டு என ஒருவருக்கு பயன்படுத்தியதை சலவை செய்த பிறகே மற்றவருக்கு பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்பதிவு செய்து கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.