சின்னஞ்சிறு கிளியே விமர்சனம்

ஆங்கில மருத்துவம் மீது நம்பிக்கை இல்லாத நாயகன் செந்தில்நாதன் தனது கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். பிரசவம் நேரத்தில் ஆங்கில மருத்துவத்தால் சாண்ட்ரா இறந்துபோகிறார்.

பிறகு செந்தில்நாதன் தனது பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார். திடீரென ஒருநாள் செந்தில்நாதனின் 6 வயது மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். தனது மகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? அதன் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி, நடிப்பில் கவர்ந்திருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன் சில காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக வரும் சாண்ட்ரா நாயர் மற்றும் அர்ச்சனா சிங் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்பா மகள் பாசம், கிராமத்து பின்னணி, இயற்கை மருத்துவம் அதில் கொஞ்சம் காதல், மெடிக்கல் கிரைம் என கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். படத்தின் முதல்பாதி சற்று குழப்பமாக இருந்தாலும் இரண்டாம்பாதி தெளிவாக செல்கிறது.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. கதையில் இருக்கும் வலு, திரைக்கதையில் இல்லை. அதே போல கதாபாத்திரங்களின் நடிப்பிலும் இல்லை.
மொத்தத்தில் ‘சின்னஞ்சிறு கிளியே’ கொஞ்சம் ரசிக்கலாம்.