சிறையில் ஏசி வசதி..சொகுசு வாழ்க்கை வாழ்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிக்கினார்

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் அடைக்கப்பட்ட சிறையில் சொகுசு வசதி செய்யபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வரும் நடிகை சாந்தினி கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் மணிகண்டனுடன் தான் 5 வருடங்கள் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்து, பின்னர் அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரை அடுத்து அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டது. இதனையடுத்து மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த 20 ஆம் தேதி பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.
அங்கு அவருக்கு ஏ.சி., சோஃபா உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிறையில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது மணிகண்டன் இன்று புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மணிகண்டனுக்கு சிறையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.