மருத்துவ குறிப்புகள்
செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்
செம்பருத்தியின் பூ மற்றும் இலை இரண்டிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. செம்பருத்தி உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தி உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
தினமும் காலையில் ஐந்து செம்பருத்தி பூக்களை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்துவர ரத்தம் சுத்தமாகும். வயிற்றுப் புண் சரியாகும். மாதவிலக்கு கோளாறு நீங்கும்.
இதய பலவீனம்
செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளைகளில் குடித்து வந்தால் இதய பலவீனம் தீரும்.
வயிற்றுப்புண்
சிலருக்கு அதிக உடல் சூடு காரணமாக வயிற்றுப் புண் ஏற்படும். அவர்கள் தினமும் 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். வாய்ப்புண் குணமாகும். இதனை ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இரும்புச்சத்து
செம்பருத்தி பூ பொடியுடன் மருதம் பட்டைத்தூள் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை. மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இதனால் ரத்த சோகை குணமாகும்.
தலைமுடி உதிர்வு
செம்பருத்தி இதழ்களை உலர்த்தி அதனுடன் வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறைந்து முடி நன்றாக வளரும்.
சிறுநீர் எரிச்சல்
இரண்டு டம்ளர் தண்ணீரில் நான்கு செம்பருத்தி இலைகளை போட்டு காய்ச்சி வடிகட்டி அதில் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
பேன் தொல்லை
தலையில் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் செம்பருத்தி பூவை எடுத்து அரைத்து தலையில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்தால் பேன் தொல்லை நீங்கும்.
You must be logged in to post a comment Login