கதிர் திரை விமர்சனம்
தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிகா நடித்துள்ள படம் ‘கதிர்’. பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு வருகிறார் நாயகன் வெங்கடேஷ். தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார். இஞ்சினியரிங் முடித்திருந்தாலும் ஆங்கிலம் சரியாகப் பேச வராததால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இவர் தங்கி இருக்கும் வீட்டு ஓனராக வரும் ரஜினி சாண்டி ஹீரோவிற்கு புத்திமதி சொல்லி திருத்துகிறார். பிறகு சொந்த ஊருக்கு செல்லும் வெங்கடேஷ் நண்பர்களுடன் சேர்ந்து சொந்த தொழில் ஆரம்பிக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை
கதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெங்கடேஷ் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஹீரோ வெங்கடேஷ்க்கு அடுத்து படத்தை தாங்கி பிடிப்பவர் ரஜினி சாண்டி தான். படத்தில் கதாநாயகியை விட பாட்டி ரஜினி சாண்டி கதாபாத்திரத்திற்குத்தான் முக்கியத்துவம் அதிகம்.

ஹீரோவின் நண்பர்களாக வரும் ஒவ்வொரு வரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். குறிப்பாக காலேஜில் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளுமே ரசிக்கும்படியாக உள்ளது.
கம்யூனிஷ போராளியாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. பிளாஷ்பேக் காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்.
பிரஷாந்த் பிள்ளையின் இசையும், ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. படத்தில் எங்கும் ஆபாச காட்சிகளோ, அல்லது இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை என்பது பாராட்டுதலுக்குரியது.
தோல்விகளால் துவண்டு போகும் இளைஞர்களுக்கு புத்திமதி சொல்வது போல படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் தினேஷ் பழனிவேல்.
மொத்தத்தில் ‘கதிர்’ படத்தை அனைவரும் ரசிக்கலாம்.
