உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையில், 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சுமார் 250 கோடி மக்கள் காது கேளாமை (Hearing Loss) பிரச்சனையை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளது. தற்போது உலகில் 160 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே ஓரளவிலாவது காது கேளாமை பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இதில் 4.3 கோடிக்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை அல்லது மறுவாழ்வுத் திட்டங்களுக்கு தேவையாக இருக்கின்றனர்.
இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரிக்க காரணங்கள்
பொதுவாக வயதானவர்கள் மட்டுமே இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள் என்று எண்ணலாம். ஆனால் தினசரி வாழ்க்கை முறையில் உள்ள மாற்றம், குறிப்பாக:
- ஹெட்ஃபோனில் உரத்த சத்தத்தில் இசை கேட்பது
- போக்குவரத்து இரைச்சல்
- நகர்ப்புற ஒலி மாசுபாடு
இவை இப்போது இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறது. விஞ்ஞான ரீதியாக இது Presbycusis எனப்படுகிறது. ஆனால், ஆரம்ப கட்டத்தில் கவனித்தால் தடுக்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒலி மாசுபாடு
ஒவ்வொரு நாளும் நம்மை சூழ்ந்திருக்கும் அதிக ஒலி, ஹெட்ஃபோன்களின் தவறான பயன்பாடு மற்றும் நகரத்தின் இரைச்சல் போன்றவை நம்மைக் கவனிக்காமல் மெல்ல மெல்ல காதின் செயலை பாதிக்கின்றன. WHO கணிப்புப்படி, 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் இந்த அபாயத்தில் உள்ளனர்.
காது கேளாமையின் முக்கிய அறிகுறிகள்
- மற்றவர்கள் பேசும்போது, அவர்களது வார்த்தைகள் புரியாமல் திரும்பத் திரும்ப கேட்க வேண்டிய நிலை
- சத்தம் அதிகமுள்ள இடங்களில் பேசுபவர்களின் குரல் தெளிவாக கேட்க முடியாத நிலை
- வயது காரணமாகத்தான் இது ஏற்படுகிறது என்ற தவறான நம்பிக்கையால் சிகிச்சையைத் தாமதப்படுத்துவது
நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?
வயதைப் பொருட்படுத்தாமல், கேட்கும் திறனில் ஏதேனும் குறை இருந்தால் உடனே பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சனை கண்டறிந்தால், 60% வரை காது கேளாமையை தடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
காது கேளாமையைத் தடுக்க என்ன செய்யலாம்?
- பாதுகாப்பான ஒலியளவுடன் இசை கேட்க பழகுங்கள்
- தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட்டுக்கொள்ளுங்கள்
- ஓட்டோடாக்ஸிக் மருந்துகளை தவிருங்கள்
- காது தொற்றுகளுக்கு உடனடி சிகிச்சை பெறுங்கள்
- மாதர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு வழங்குங்கள்
- 45 வயதுக்கு மேல் ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
பிள்ளைகளுக்கே ஆரம்பத்தில் விழிப்புணர்வு வேண்டும்
- காது தொற்றுகளை தவிர்க்க தடுப்பூசி கட்டாயம்
- குழந்தைகள் குறைவான ஒலியில் இசை கேட்க வேண்டும்
- ஹெட்ஃபோன் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு தேவை
- காது நோய்களை அலட்சியம் செய்யாமல் உடனே சிகிச்சை பெற வேண்டும்
காது கேளாமை பிரச்சனை இனி வயதானோருக்கு மட்டுமல்ல! இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது பெரிதாக அதிகரிக்கிறது. காது என்பது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பு தேவைப்படுகிற ஒரு முக்கிய உறுப்பாகும். அதனால்தான் WHOவின் எச்சரிக்கையை நாம் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வும், சரியான பழக்கங்களும் இருந்தால் காது கேளாமையை நம்மால் தடுக்க முடியும்!