மும்பை: புதிய திரைப்படங்கள் வெளியான பிறகு, முதல் நாள் முதல் காட்சிக்குப் பிறகு ரசிகர்களிடம் கேட்கப்படும் விமர்சனங்கள் அந்த படத்தின் வருங்காலத்தை தீர்மானிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றவை. இந்த நடைமுறையை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தனது சமீபத்திய திரைப்படமான ‘ஹவுஸ் ஃபுல் 5’ பற்றி ரசிகர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ள தீர்மானித்துள்ளார்.
ஆனால், அவர் ரசிகர்களிடையே நேரில் சென்றாலும், யாருக்கும் அவர் தெரியாமல் இருக்க, அவர் முகமூடி (மாஸ்க்) அணிந்து கொண்டு, திரைப்படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்களிடம் விமர்சனங்களை கேட்கத் தொடங்கினார். அவர் அணிந்திருந்த ‘கில்லர் மாஸ்க்’ காரணமாக, யாரும் அவரை அடையாளம் காணவில்லை.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களிடம் படம் பற்றிய உண்மையான கருத்துகளை நேரில் கேட்கும் அக்ஷய் குமாரின் இந்த புதுமையான முயற்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சாதாரணமாக நட்சத்திரங்கள் விமர்சனங்களை ஊடகங்கள் மூலமாகவே அறிந்து கொள்கிறார்கள். ஆனால், அக்ஷய் குமார் போலி அடையாளத்தில் நேரில் சென்று ரசிகர்களிடம் விமர்சனங்களை கேட்கும் அளவுக்கு உழைக்கும் தன்மை கொண்டவர் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
அவரின் இந்த செயல் ரசிகர்களிடையே மட்டுமல்ல, திரையுலகத்திலும் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.