பொதுவாக நம் அனைவருக்கும் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனாலும், சிலர் கோவிலின் நிலைவாசல்படியை மிதித்தவாறு உள்ளே செல்லும் காட்சிகள் பொதுவாகவே காணப்படுகின்றன. இது குறித்து அறிந்த பெரியவர்கள் வழிகாட்டுகிறார்கள் – கோவிலின் நிலைவாசல்படியை மிதிப்பது தவறான செயல் என்று.
வீட்டில் நிலைவாசல் அமைக்கும்போதே குலதெய்வத்தை வைத்து பஞ்சலோக தட்டுகள் பதித்து, அதனை ஒரு புனித இடமாகவே கருதுகிறோம். அப்படிப்பட்ட இடத்தில் கூட உட்கார்வது கூட தவறு என நம்மை பழக்கப்படுத்தியுள்ளனர். அதேபோல, கோவிலின் நிலைவாசல் ஒரு மிகுந்த சக்தி கொண்ட புனித இடமாக கருதப்படுகிறது.
கோவிலுக்குள் செல்லும் முன், அகம் புறம் பரிசுத்தமாக இருக்க வேண்டும். கோவிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் கால்களை கழுவி புனிதத்துடன் உள்ளே செல்லும் பழக்கம் இருக்க வேண்டும். மேலும், கோபுர தரிசனம் செய்து ‘கோடி புண்ணியம்’ பெறுவதே வழிமுறை.
மனதில் இருக்கும் துயரம், கவலை, தீய எண்ணங்களை ஒழிக்கக் கூடிய ஒரு சக்தி இந்த நிலைவாசல்படிக்கு உண்டு என நம்பப்படுகிறது. அதனால்தான், அதை மிதிக்காமல் மரியாதையுடன் தாண்டி செல்வது, அல்லது அதனைத் தொட்டு வணங்கிவிட்டு செல்வது சிறந்த வழிமுறையாகவும், அதிஷ்டமாகவும் கருதப்படுகிறது.
இது பற்றி பக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றும் பரவலாகப் பகிரப்பட்டது.
முன்னோர்களின் வழிகாட்டுதலை மரியாதையுடன் பின்பற்றுவோம்; கோவிலில் நிலைவாசல்படிக்கு மரியாதை செலுத்துவோம்!