திருப்பூர் குருவி படத்தில் அறிமுக நடிகர்களான கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன் ஆகியோர் நாயகர்களாகவும், தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்ஷா ஆகியோர் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அறிமுக நடிகர்கள் போல இல்லாமல், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காதல், நட்பு, பொறுப்புணர்வு, கோபம், ஏமாற்றம் என ஒரு மனிதனின் உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, கிராமத்து அப்பாவிகளாக வந்து, திருப்பூர் சூழலில் சிக்கித் தவிக்கும் நாயகிகள், அவர்களின் வெள்ளந்தித்தனத்தையும், பின் அவர்கள் சந்திக்கும் அதிர்ச்சியையும் கண்களில் மிகத் தெளிவாகக் காட்டுகின்றனர்.
இறுதிக்காட்சியில், அவர்களது துயரமும், அதை எதிர்கொள்ளும் விதமும் பார்வையாளர்களின் மனதை வெகுவாகப் பாதிக்கின்றன. அவர்களது எதார்த்தமான நடிப்பு, படத்தின் மையக்கருவான சமூகப் பிரச்சனையை பார்வையாளர்களிடம் ஆழமாகப் பதிய வைக்கப் பெரிதும் உதவுகிறது. ஒரு அறிமுக படத்திற்கு இப்படியொரு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
பிரியன் வித்தியாசமான வில்லன் வேடத்தில் மிரட்டியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் வில்லத்தனம் ஒரு வழக்கமான மாஸ் வில்லனாக இல்லாமல், மிகவும் நிதானமாகவும், சத்தமில்லாமலும் நம்மை அச்சுறுத்துகிறது.
அவரது கண்கள் மற்றும் உடல்மொழி, ஒரு கொடூரமான மனநிலையை மிகச் சரியாகப் பிரதிபலிக்கின்றன. மொத்தத்தில், வில்லனின் கதாபாத்திர வடிவமைப்பு ஒரு ஆழமான சமூகச் சிக்கலை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது, பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நடிப்பு அமைந்திருக்கிறது.
அதேபோல, தொழில்சாலை மேலாளராக வரும் இசக்கி ராஜா ஒரு முக்கியமான வேடத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவரது கள்ளத்தனமான முகமும், சந்தர்ப்பவாதப் பேச்சும், வில்லன் இவரின் பேச்சை கேட்டு வில்லத்தனத்துக்கு துணை போகும் மாதிரி காட்டியிருப்பது விதம் பார்வையாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தும்.
இயக்குநர் ஜெயகாந்தன் ரெங்கசாமி, திருப்பூரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை தைரியமாக உருவாக்கியுள்ளார். வெறும் 10 நாட்களில் ஒரு சமூக அக்கறை கொண்ட படத்தை எடுத்திருப்பது மிக பெரிய பாராட்டுகளுக்குரியது.
வறுமையின் காரணமாக, கிராமப்புறங்களில் இருந்து திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வரும் அப்பாவிப் பெண்களுக்கு, தொழில்சாலைகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் எந்த விதத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகிறது என்பதை மிக வெளிப்படையாக, எந்த சமரசமும் இன்றிப் பேசியுள்ளார். ஆரம்பத்தில் வரும் காட்சிகள் சற்று நீளமாகத் தோன்றினாலும், படத்தின் கதைக்களம் படிப்படியாக வலுப்பெற்று, இறுதியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.