சென்னை, 14 ஜூன் 2025 – தமிழ்நாடு அரசு மூத்த குடிமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், பல மூத்த குடிமக்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மனு கொடுக்கவோ, விண்ணப்பிக்கவோ சிரமமாக உள்ளது. இதனால் அவர்களின் அரசு சேவைகள் பெறும் சிக்கல் நீடித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “Senior Citizen Mobile App” என்ற புதிய கைப்பேசி செயலியை உருவாக்கி, 2023 செப்டம்பர் மாதம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் தொடங்கி வைத்துள்ளது.
செயலியில் உள்ள முக்கிய அம்சங்கள்
மூத்த குடிமக்கள் இந்த செயலியில் கீழ்க்கண்ட சேவைகளை பெற முடியும்:
- அருகிலுள்ள முதியோர் இல்லங்கள் பற்றிய விரிவான தகவல்கள்
- மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் தொடர்பான விவரங்கள்
- மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் தொடர்பு விவரங்கள்
- மாற்று மருத்துவமனை சேவைகள்
- மத்திய மற்றும் மாநில அரசின் மூத்த குடிமக்கள் நலத்திட்டங்கள்
- உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அறிவுரைகள்
- மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்திடும் வசதி
பயன்பாடு மற்றும் விழிப்புணர்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த செயலியை மூத்த குடிமக்கள் Google Play Store அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளம் (seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in) மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இந்த செயலியை பயன்படுத்துமாறு வலியுறுத்தி, மற்ற மாவட்டங்களிலும் இதனை பரப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் சமூக மக்கள் செயலியின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து மக்களுக்கு விளக்கி உதவுமாறு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.