தெரிந்து கொள்வோம்
பெண்கள் திருமணத்தின் போது ஏன் சிவப்பு நிற புடவை அணிகிறார்கள் தெரியுமா?
பெரும்பாலான இந்திய மணப்பெண்களை சிவப்பு நிற முகூர்த்த ஆடைகளில் தான் அதிகம் பார்க்கிறோம். இந்தியாவில் பல மாநிலங்களில் அவர்களின் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்ப திருமணங்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
எத்தனையோ நிறங்களில் ஆடைகள் இருந்தாலும் பெரும்பாலான மணப்பெண்கள் திருமண ஆடையை சிகப்பு நிறத்திலேயே தேர்ந்தெடுக்கின்றனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சிவப்பு நிறம் துர்க்கை அம்மனின் நிறம். சிவப்பு நிறம் தைரியம் மற்றும் மன வலிமையை குறிக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்து உலகுக்கு அமைதியை வழங்கிய அம்மனின் நிறம் சிவப்பு. திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண் தைரியமாகவும், அனைவருக்கும் நிம்மதியை ஏற்படுத்தும் நபராகவும் இருப்பார் என்ற ஐதீகத்தில் சிவப்பு நிற ஆடைகள் தேர்வு செய்யப் படுகிறது.
ஜோதிட ரீதியாக சிவப்பு என்பது செவ்வாய் கிரகத்தை குறிக்கிறது. செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்தால்தான் திருமணம் சரியான நேரத்தில் நடக்கும். செவ்வாய் கிரகத்தின் நிறத்தில் ஆடையை அணிவது புதிய தம்பதிகளுக்குள் இணக்கத்தை ஏற்படுத்தும்.
சிவப்பு நிறம் என்பது பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. சிவப்பு நிறம் மகிழ்ச்சி மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது. திருமணம் மட்டுமல்லாமல் பெரும்பாலான பண்டிகைகள் கொண்டாடும் பொழுதும் பெண்கள் சிவப்பு நிறத்தில் ஆடைகளை அணிவார்கள்.
சாஸ்திர சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை கடந்து சிவப்பு என்பது மிக அழகான அனைவரையும் ஈர்க்கும் நிறம். மேலும் மணப்பெண்ணின் அழகை அதிகரிக்கும். சிவப்பு என்பது மங்கலகரமான நிறத்தைக் குறிக்கிறது.
You must be logged in to post a comment Login