உண்மையான முண்டாசுப்பட்டி கிராமத்தை பார்த்தது உண்டா? – உங்களுக்காக ஒரு தொகுப்பு

கொரோனா என்ற பேரை கேட்டாலே உலக வல்லரசு நாடுகள் உட்பட அனைவரும் அச்சத்தில் உரைகின்றனர். ஆனால் மெக்சிகோவில் உள்ள ஒரு சிறிய நகர மக்கள் இதனை கண்டுகொள்வதில்லை… ஏன்?
ராம் குமார் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி என்ற படம் 2014ல் வெளியானது, அதில் போட்டோ எடுத்துக்கொண்டால், ஆயுள் குறைந்துவிடும் என்று நம்பும் ஊரைப்பற்றிய ஒரு கற்பனை கதையாகும்.
இந்த கற்பனை ஊரைபோலவே, மெக்சிகோவில் நிஜத்தில் சான் லூயிஸ் பொட்டோசி என்ற சிறிய நகரம் உள்ளது. இது கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி, மேலும் கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த நகரம்.

இந்நிலையில், மெக்சிகோவில் கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், நாட்டின் பிற பகுதியில் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க, சான் லூயிஸ் பொட்டோசி மக்கள் மட்டும் அதை கடைபிடிக்க மறுத்துவிட்டனர்.
இந்த வைரஸ், மெக்சிகோ அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கிருமி எனவும், இரவு நேரத்தில் அரசு விமானப்படை விமானங்கள், நகரத்தின் மீது பறந்து வைரசை பரப்புவதாக மக்கள் மத்தியில் வாட்ஸ் ஆப் தகவல் பரவியுள்ளது.
இந்த தகவலை நம்பிய மக்கள், அரசு விதித்துள்ள ஊரடங்கினை மதிக்க மறுக்கின்றனர். மேலும், வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்ற சுகாதரப்பணியாளர்கள் பலரையும், கடுமையாக தாக்கியுள்ளனர்.
இப்பகுதியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் 74 பேர் மட்டுமே வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது சுமார் 400 பேருக்கு பரவியுள்ளது. மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது இங்கு பாதிப்பு குறைவுதான் இருந்தாலும், இந்தநிலை நீடித்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று மெக்சிகோ சுகாதாரத்துறை கவலையில் உள்ளது. மேலும், கொரோனா அதுவாகவே அழிந்துவிடும் என்று இப்பகுதி நம்புகின்றனர்.